HOME தியானத்தின் வெற்றி GURUJI SPEECH உள்ளம் பெருங்கோயில் பக்தியின் சிறப்பு பக்தியும் கோயிலும் BOOKS STICKERS  
 

"நமது லட்சியத்தில் காட்டும் உறுதியே வெற்றியின் ரகசியம்"

இறைவனை அறிவதையும், அடைவதையும் யார் லட்சியமாகக் கொண்டிருக்கிறாரோ அவரை ஒருபோதும் இறைவன் கைவிடமாட்டார். பல லட்சியவாதிகள் இருப்பர், ஆனால் இறைவனை அடைய முயல்பவரே முதன்மையான லட்சியவாதி. 'மண்ணும் பொன்னும் நம்மை இட்டு போவதற்குள் நாம் அதைவிட்டு போகும் நிர்பந்தம் இருப்பதை நாம் சிந்திக்க வேண்டும்.'
 
பொதுவாக ஒரு லட்சியவாதி, சிறந்த தன்னம்பிக்கையாளராகவும் இருப்பார். தன்னம்பிக்கை என்பது தனது அறிவின்மேல் நம்பிக்கை வைப்பதாகும். அவ்வப்போது சந்தேகம் வந்தாலும் சிந்தித்து தெளிந்து விடுவர்.
 
பக்தியில் மூட நம்பிக்கை இருக்கக்கூடாது. உணர்ந்து ஆராய்ந்து செய்தல் வேண்டும். அறிவுப்பூர்வமாக உணர்வுப்பாதையில் செல்வதால் மட்டுமே இறைவனை உணர்ந்து பார்க்க முடியும். ஒரு மூடன் இறைவன்மேல் நம்பிக்கை வைக்க முடியாது. அப்படி நம்பிக்கை வைத்தாலும் அதற்குப்பெயர்தான் மூடநம்பிக்கையாகும்.                          

( மூடன் + நம்பிக்கை = மூடநம்பிக்கையாகும் )
 
பொதுவாக கலியுகமான தற்காலத்தில் இறைவனைப் பிடிப்பது வெகுசுலபம். ஆனால் இறைவனை மறக்கடிக்க மாயை ஏகப்பட்ட காட்சியை ஓட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் உண்மையைக் கூறவரும் குருமார்களை மக்கள் மதிப்பதில்லை. உதாரணமாக ஒரு நல்ல புத்தகத்திலுள்ள கருத்துக்களை நமது மூளையில் பதிய வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, புத்தக அட்டைப்படத்தை அல்ல. ஒரு குழந்தைக்கு படம் பார்த்து படிக்க வைப்பதற்க்குக் காரணம் அந்தப்படத்திலுள்ள பொருள் இன்னது என்று தெரிவதற்காகத்தான். ஆனால் அந்தப்படத்திலுள்ள பொருளை சாப்பிட முடியாது. பொருளை கடையில் வாங்குவதற்க்கொரு பயிற்சியாகும்.
 
இதைபோன்றுதான் இறைவனை அடைய ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு பயிற்சி சிலை விளக்கமாகக் காட்டப்பட்டிருக்கிறது. இதை உணர்ந்து புரிந்து இந்தப் பிறவியில் முயற்சிப்பவர்களுக்கு சரியான வாய்ப்பளிக்கும் பள்ளியாக விளங்குவதே கோயில்.
   
 

சிந்தனை செய் மனமே!

   
 
அதாவது சினிமாவைப் பார்த்துவிட்டு அதில் உள்ள முக்கியமான காட்சியை நினைத்தவுடன் அந்தக் காட்சி உங்கள் மூளையில் இப்பொழுதுகூட ஓடுவதைப் பார்க்க முடிகிறது.
   
 
அதைப்போன்று ஏன் உங்களுக்கு விருப்பமான கோயிலை நிரந்தரமாக எழுப்பி அதில் அவ்வப்போது சென்று தனக்குள்ளே வழிபட வேண்டும் என்பதைத்தான் கோயில் எழுப்பிய புண்ணியவான்கள் கூறுகின்றனர்.
   
 
தனக்குள்ளே கோயில் எழுப்பி வாழ்பவர்களே மனிதர்களில் சிறந்தவர்கள். அந்தக் கோயிலில் பகவானை வைத்து மானசீகமாக பூஜிப்பவர்களே முக்தி நிலையை அடையப்போகும் மனுஈசர்கள். இந்த உலகிலும், மறுமையிலும் வெற்றிபெறும் பாக்கியவான்கள்.
   
 
இறைவனை தனக்குள்ளே பார்க்கப் பார்க்கப் உடல் கோயிலாகவும் ஜீவன் இறைவனாகவும் மாறுகிறது. புழுவாக இருந்து பின்பு வண்ணத்துப்பூச்சியாக மாறி பறந்து செல்லவில்லையா? இந்த உண்மையை உணர்ந்து கொண்டவர்கள் ஞான இறக்கை பெற்று இன்ப உலகைக் கடந்து பேரின்ப ஆகாயத்தில் பறந்து செல்கின்றனர். அதில் நாமும் பறந்து செல்வோம் என்று நம்பிக்கை கொள்வோம் விழிப்புணர்ச்சி பெற்று வளம் பெறுவோம்.